[one_half]ஒரு நல்ல நாளில் மழைபோல் ஓய்ந்தாய்
உனக்கொரு வாசல் மற்றும் மரம்
கூடவே எனது பால்யத்தையும்
பரிசளித்தேன்
ஒரு சக்ரவர்த்தியைப் போல
அதை நீ ஏற்றுக்கொண்டது மனதில் நிற்கிறது
காலத்தின் முன் ஓடி நின்று பார்க்கிறேன்
தொலைதூரப் புள்ளியாய் உன்னுடல் மறைகிறது
நான் எனது விரல்களை சொடுக்குகிறேன்
உனது மெளனத்தின் உஷ்ணம்
எனது கருணையின் கண்டிப்பு
அல்லது நீ விடைபெற்ற
கடைசி இரவு
இப்போது நீ
என்னிடம் விட்டுச் சென்றிருக்கும் கேள்விகள்
அல்லது பதில்கள்
நமது வாசல் மரம் தனது
இலையுதிர் காலத்தை தெரிவிக்கிறது
எனது பால்யத்தை அதன் சருகுகள் சப்திக்கின்றன
இனியும் ஒரு பறவையென நீ நம்
மழை மாதத்தில் வந்தமரும்போது
அதன் பழங்களில்
உனக்கான பதில் காத்திருக்கக்கூடும்.[/one_half][one_half_last][/one_half_last]