[one_half]கதவு தட்டும்
ஓசை கேட்டுத் திறக்கும் முன்னே
உள் நுழைந்து
வரவேற்பறையின் நாற்காலியில் அமர்ந்து
என்னை எனக்கு அறிமுகம் செய்தாய்
யாரென்று கேட்கும் முன்னரே
தேநீர் அளித்தாய்
உன் விலாசம் தெரியாது எனக்கு
நீ யாரென்றும் அறிந்திலேன்
இருளின் நிறமுடுத்தியிருக்கும் நீ
பாவனைகளால்
பிரதிபலித்தாய் என்னை
வியந்து பேசும் முன்னே
நான் வேண்டியது கேட்டு வினவினாய்
பூனைக் குட்டிகளின் நடமாட்டம்
அறையெங்கிலும்
உணவிற்காய் என் விரல்களை
பூனைகளுக்குக் கொடுத்த வேளையில்
கதவின் சந்துகளுக்கிடையில்
கரைந்தபடி போய்க் கொண்டேயிருந்தாய்
ஓடிவந்து கதவைத் திறக்கு முன்னரே
அனைத்தும் முடிந்துபோனது
விழித்துப் பார்த்தபோது
எதுவுமே நடக்காதபடி
பத்திரமாய் இருந்ததென் வரவேற்பறை
என்
வாசனைகளைத் தாங்கி.[/one_half]
[one_half_last] [/one_half_last]