[one_half]சாலையில் விரையும் வாகனத்தினுள்
ஆழ்ந்து உறங்கியிருந்தேன்
கனவில் புத்தர்
காலமும் வெளியும் அமைதியாய் இருக்கிறதா
எனக் கேட்டிருக்க வேண்டும் அவர்
எனது மூளை
சூரியனுக்குள் இருந்தது
யாரைக் கடத்திச் செல்கிறது வாகனம்
கால்மாட்டில் படுத்திருந்த
நாய்களைக் கண்டதும் உறுதி செய்தேன்
புத்தரின் முகம்
ஆதிசங்கரனைப் போன்றிருந்தது
கொஞ்சம் பஞ்சுத்துணுக்குகளை
கையில் எடுத்த சங்கரன் நூலாக்கினான்
நூலைக் கயிறாக்கினான்
அவற்றை நாய்களின் கழுத்தில் பிணைத்து
கைகளில் கொடுத்துவிட்டு மறைந்தான்
கயிற்றைப் பற்றியபடியே விழித்தேன்
வெறுங்கயிறு கையில் இருக்க
சாலையில் ஒரு புத்தனைத் துரத்தியபடி
ஓடிக்கொண்டிருந்தன நாய்கள். [/one_half]
[one_half_last][/one_half_last]